Sunday 25 August 2013

பற்றி எரியும் பாலைவனம்

 

செப்டம்பர் மாதம் வரவிருக்கும் கேப்டன் ப்ரின்ஸ் (பெர்னார்ட் ப்ரின்ஸ்) கதைகளை விரும்பி படித்தவன் நான். இதுவரையில் ஒரு கதையை கூட நான் மிஸ் செய்ததே கிடையாது. நெடுநாளாக இந்த கதைகளை வெளியிடுவீர்கள் என்று காத்திருந்தேன். இப்போதுதான் அதற்க்கான நேரம் வந்துள்ளது.

தாமதம் தான் என்றாலும் அமிர்தம் எப்போது கிடைத்தாலும் அது அமிர்தம் தானேயன்றி வேறில்லை அல்லவா? அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி.

// உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் !சாணித்தாளில், black & white -ல் படித்தே போதே அற்புதமாய்த் தென்பட்ட கதைகளை இன்று வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு போனஸ் என்று சொல்லலாம் !

இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? ; //

இந்த இதழின் முதல் பிரதிகள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பைண்டிங் செய்து விட்டதால் இன்னமும் பத்திரமாகவே இருக்கின்றன. அந்த இதழ்களை பற்றி எவ்வளவு சொன்னாலும் அவை குறைவாகவே தெரியும்.

Patri yeriyum palaivanam

பற்றி எரியும் பாலைவனம்: ஆப்பிரிக்காவின் கடலோர நகரம் ஒன்றிற்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அத்த்யாவசிய மருந்துகளை கொண்டு சேர்க்க விரும்புகிறார் தன்னார்வ தொண்டர் ஒருவர். பெர்குசன் என்பது அவரது பெயர்.

யாருமே மேற்கொள்ள தயங்கும் இந்த நல்லெண்ண பயணத்திற்கு வழக்கம் போல கேப்டன் ப்ரின்ஸ் ஒத்துக்கொள்கிறார். அவருடைய குழுவினருடன் பெர்குசனும் பயணம் செய்து இலக்கை அடைகின்றனர். அப்போது நடக்கும் ஒரு சிறு சம்பவத்தால் பெர்குசன் சுகவீனம் அடைய, மருந்துகளை ஒரு ஒட்டகத்தின் மேலே ஏற்றிக்கொண்டு பார்னே மட்டும் தனியாக பாலைவனத்தில் கிளம்புகிறார்.

அவர் கிளம்பியவுடன் முழித்துக்கொள்ளும் பெர்குசன், அந்த மருந்துகளில் சிலவற்றை போதைக்காகவும் பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்து சப்ளை வருவதை அங்குள்ள பயங்கரமான கொள்ளையர் கும்பலுக்கு தெரியும் என்றும் அவர்கள் பார்னேவை கொன்றுவிட்டு அந்த மருந்துகளை கைப்பற்றுவார்கள் என்றும் அபாய சங்கை முழங்குகிறார்.

நண்பன் ஆபத்தில் இருப்பதை தாமதமாக அறியும் ப்ரின்ஸ் உடனடியாக பார்னேவை காப்பாற்ற துடிக்கிறான். ஆனால் கப்பலை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடியாது. பெர்குசனும் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. ஆகவே பொடியன் ஜின்னை அவருக்கு துணையாக விட்டுவிட்டு, கப்பலை ஒரு மறைவிடமான இடத்தில் நிறுத்தி (நோ பார்க்கிங் ஏரியாவில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) விட்டு பாலவனதிர்க்கு விரைகிறான்.

இதற்க்கு மேலே என்ன நடந்தது என்பதை நான் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை. ஆனால் வழக்கமான ப்ரின்ஸ் கதைகளுக்கேயுரிய இடியாப்ப சிக்கல் கொண்ட சூழலும் இந்த கதையின் க்ளைமேக்ஸில் வருகிறது. என்ன நடந்தது என்பதை ஒரு பத்து நாள் பொறுத்திருந்து படித்து பாருங்கள்.

Page 1

இந்த கதையின்  ஹைலைட் என்று நான் கருதுவதே ஒட்டகத்திற்கும் பார்னேவுக்கும் இடையேயான நட்புதான். அதை தாண்டி கடைசி கட்டங்களில் அந்த ரவுத்திரமான பாலைவன காட்சிகளை ஓவியர் ஹெர்மான் வரைந்துள்ள விதம் கண்டிப்பாக நம்மை மதி மயங்க வைக்கும். கருப்பு வெள்ளையில் படித்தே காதல் கொண்ட நாங்கள் கலரில் கண்டால் என்ன செய்வோம் எனது தெரியாமல் காத்திருக்கிறோம்.

பாய்சன் கிடைத்தாலே அதை பாயாசம் கிடைத்தது போல சாப்பிடுவோம், இப்போது பாயாசமே கிடைக்கிறது. விடுவோமா என்ன?

Monday 5 August 2013

ஆகஸ்ட் 2013 மாத காமிக்ஸ் இதழ்கள்

இன்றுதான் புத்தகங்கள் வந்தது. இரண்டு புத்தகமும் நன்றாகவே இருந்தது. சுட்டி லக்கியின் சன்ஷைன் புத்தகம் சென்டர் பின் அடிக்கப்பட்டு வந்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது (ராணி காமிக்ஸ் ஆரம்ப கால புத்தகங்கள், முத்து காமிக்ஸில் வந்த ஒரு ருபாய் - மாதமிருமுறை புத்தகங்கள்).



இதுவரை எடிட்டரின் தளத்திலோ அல்லது வேறு எங்குமோ சைலண்ட் மோடில் மட்டுமே இந்த தளத்தை வாசித்து வந்த நான் முதன் முறையாக ஒரு கமெண்ட் இடும் அளவிற்கு வந்துள்ளேன் அதற்க்கு முழு முதல் காரணம் க்ரீன் மேனர் கதைகளே.


வானவில்லுக்கு ஏழு வண்ணங்களும் இருந்தாலே அதனை ரசிக்க முடியும். வெறும் சண்டை நிறைந்த கௌ பாய் கதைகளோ, உளவாளிகள் நிறைந்த மர்மக் கதைகளோ, சிரிப்பை தூண்டும் நகைச்சுவை கதைகளோ, உண்மையை சம்மட்டியால் அடிக்கும் க்ராபிக் நாவல்களோ நமது காமிக்ஸ் புத்தகங்களை முழுமை செய்யவில்லை.


மனதில் மிருகம் வேண்டும் போன்ற அசாதாரண களத்தை கொண்ட கதைகளே நமது வாசிப்பு திறனை மேம்படுத்துகிறது. ஒரு சிறந்த கதாசிரியர் / எடிட்டர் / வெளியீட்டாளர் ஹிட் ஆன கதை வரிசைகளையே தொடராமல் வித்தியாசமான கதைகளை வெளியிட்டு வாசகர்களின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பலரும் தயங்கும் வேளையில் நீங்கள் அதனை துணிந்து செயல்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்.

இந்த கதை தற்போதைய இலக்கிய சூழலில் பின் நவீனத்துவம் என்று சிலாகித்து பேசப்படும் படைப்புகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. தயவு செய்து இந்த புத்தகத்தை மற்ற வெகுஜன பத்திரிக்கைகளின் புதிய வரவு பகுதியில் இடம் பெற செய்யுங்கள். குமுதம் ஆனந்த விகடன், இந்தியா டுடே போன்ற இதழ்களில் புதிய புத்தக அறிமுகம் செய்யப்படுகின்றது. புத்தகத்தின் 2/5 காப்பிகளை அனுப்பினால் அவர்கள் அதனை அறிமுகம் செய்வார்கள். இதன்மூலம் காமிக்ஸ் மறுபடியும் வருகிறது எனது தெரிய வருவதோடில்லாமல் ஒரு சிறிய விளம்பரமும் செய்தது போல இருக்கும்